படத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நடிகர் சித்தார்த் ஆடியுள்ளார். சில டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சொந்த மண்ணில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. அதில் எப்படியாவது தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என தீவிர முயற்சி செய்கிறார் சித்தார்த். இதற்காக தனது மனைவி மீரா ஜாஸ்மின் மற்றும் மகனை கூட கவனிக்காமல் கிரிக்கெட் மட்டுமே தனது வாழ்க்கை என இருந்து வருகிறார்.
கதையின் இன்னொரு ஆட்டக்காரர் மாதவன், அவர் எரிபொருளுக்கு மாற்றாக நீராவி மூலம் இயங்கும் என்ஜினை கண்டுபிடித்து விட்டு, அதற்கு அங்கீகாரம் வேண்டி அரசிடம் போராடி வருகிறார் . இதனால் தனது மனைவி நயன்தாரா குழந்தை பாக்கியஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் அங்கிகாரம் வாங்க அலையும் மாதவன். இந்த சூழ்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அந்த போட்டியை பயன்படுத்தி மேட்ச் பிக்சிங் செய்யும் சூதாட்டங்கள் நடக்கின்றன. அந்த சூதாட்டத்தில் சிக்கினாரா சித்தார்த்? தன்னுடைய கனவை எட்டுவதற்காக மாதவன் என்ன செய்தார்? நயன்தாராவின் கனவு என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
மாதவன் தன்னுடைய நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை தாங்கி பிடித்துள்ளார். அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார் நயன்தாரா. குழந்தைக்காக ஏங்கும் காட்சிகளில் எமோஷனல் ஆன நடிப்பை தந்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் சித்தார்த். ஒரு கிரிக்கெட் வீரரின் மேனரிசத்தை அப்படியே திரையில் காட்டி நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகியுள்ள மீரா ஜாஸ்மின் தனது இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார். குழந்தையைப் பிரிந்த ஒரு தாயின் பரிதவிப்பை நடிக்கும் காட்சிகளில் அவர் அனைவரது கைதட்டலும் பெறுகிறார். இவர்களோடு ரவுடியாக வரும் ஆடுகளம் முருகதாஸ், காவல்துறை அதிகாரியாக வரும் ஷாம் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர்.
மூன்று கேரக்டர், ஒரு கிரிக்கெட் மைதானம் என கதையை அழகாக சொல்லி உள்ளார் அறிமுக இயக்குனர் சஷிகாந்த். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே நேரத்தில் டெஸ்ட் மேட்ச் ஆனாலும் ஆடியன்ஸ்க்கு சிக்ஸர் அளிக்கிறார். இருப்பினும் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பது போல் கிளைமாக்ஸ் வைத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் சஷிகாந்த்.

டெஸ்ட் மேட்ச்சையும் சுவாரசியமாக ஆடினால் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துள்ளார் சஷிகாந்த். அறிமுக இசை அமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசையில் ஸ்ருதி கூட்டி உள்ளார். வீராஜ் சின் கோஷில் ஒளிப்பதிவில் சேப்பாக்கம் மைதானம் மற்றும் காட்சிகள் பிரம்மாண்டமாக தெரிகின்றன.
டெஸ்ட் கிரிக்கெட்டை பெரிய திரையில் பார்பது ரசிக்கும்படியாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு நாளும் போட்டி முடியும் போது அம்பயர் அந்த பைல்ஸ்களை கீழே தள்ளிவிடும் காட்சிகளை நுணுக்கமாக காண்பிப்பது கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் கவரும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.